முன்னாள் மன்னார் கத்தோலிக்க ஆயர் இராயப்பு யோசப் ;பாதகமான சூழ்நிலைக்கு மத்தியிலும் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அதிகாரத்துக்கு உண்மையை உரைத்த குரலற்றவர்களின் குரல்


டி.பி.எஸ். ஜெயராஜ்

” நான் நல்ல போராட்டத்தை போராடினேன். ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தை காத்துக் கொண்டேன்.”( I have fought the good fight, I have finished the race, I have kept the faith.”) – அப்போஸ்தலர் புனித பவுல் ( Apostle St.Paul ) தீமோத்தேயுவுக்கு‌ எழுதிய இரண்டாவது கடிதத்தில் (2 Timothy 4.7) உள்ள இந்த வாசகங்கள், முன்னாள் மன்னார் கத்தோலிக்க ஆயர் அதிவண. இராயப்பு யோசப்பின் வாழ்வுக்கும் சேவைக்கும் மிகவும் பொருத்தமான புகழாஞ்சலியாகும். ஏப்ரில் 16 அவரது 85 வது பிறந்த தினமாகும். தனது 81 வது பிறந்த தினத்துக்கு 15 தினங்கள் முன்னதாக 2021 ஏப்ரில் முதலாம் திகதி அவர் காலமானார்.

ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையை நினைவுகூரும் இந்த கட்டுரை பாதகமான சூழ்நிலைக்கு மத்தியிலும் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அதிகாரத்துக்கு உண்மையை உரைத்து தனது மக்களுக்காக உறுதிகுலையாமல் நின்ற ஒரு கத்தோலிக்க மதகுருவுக்கான அஞ்சலியாக அமைகிறது.

ஆயர் இராயப்பு யோசப் 1992 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை 23 வருடங்களுக்கும் அதிகமான காலமாக மன்னார் ஆயராக சேவை செய்தவர். அவரது சேவைக்காலத்தில் இலங்கை ஆயுதப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் பயங்கரமான போர் 17 வருடங்கள் நீடித்தது. அந்த போர் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்களை மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நிர்மூலம் செய்தது.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டம் வட மாகாணத்தின் வவுனியா, மன்னார் நிருவாக மாவட்டங்களை உள்ளடக்கியது. போர்க் காலத்தில் மன்னார் மறை மாவட்டத்தின் கீழ் வரும் பகுதிகள் படுமோசமாக பாதிக்கப்பட்டன.பல தேவாலயங்கள் சேதமடைந்தன. மக்கள் கொல்லப்பட்டார்கள், காணாமல் போனார்கள் ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள் வீடுவாசல்களை இழந்து இடம்பெயர்ந்தார்கள். கத்தோலிக்க மதகுருமார் சிலரும் பாதிக்கப்பட்டார்கள். மடுமாதாவின் திருவுருவச்சிலை கூட ஒரு தடவை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக தேவாலயத்தில் இருந்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அத்தகையதொரு சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நிவாரணத்துக்காக, மன ஆறுதலுக்காக , வழிகாட்டலுக்காக தங்களது ஆயரை நாடுவது இயல்பானதே. அந்த நிலைவரத்தை மெச்சத்தக்க துணிச்சலுடன் ஆயர் இராயப்பு யோசப் எதிர்கொண்டார். மன்னார் மக்களின் பிரதான மேய்ப்பராக அவர் வலிமையான தைரியத்துடன் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு உண்மையை உரைத்தார். அதனால், அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினார்.

உண்மையை பேசியதன் மூலமாக ஆயர் ‘ அதிகாரத்தின்’ சீற்றத்துக்கு ஆளானார். ஒரு ‘ புலி ஆயராக’ அவர் செயற்படுவதாக குற்றஞ்சாட்டி ஊடகங்களில் திட்டமிட்ட முறையில் பிரசாரங்கள் செய்யப்பட்டன. இராயப்பு யோசப் சர்ச்சைக்குரிய ஒரு ஆயராக அடிக்கடி வர்ணிக்கப்பட்டார். புலிகளின் ஒரு ஆதரவாளராகவும் மதகுருவின் ஆடை அணிந்த ஒரு புலி என்றும் நேய்மையற்ற முறையில் அடிக்கடி அவர் குற்றஞ்சாட்டப்பட்டார். இந்த த்க்குதல்களுக்கு மத்தியிலும் அவர் குரலற்றவர்களின் குரலாக விளங்கினார்.

நெடுந்தீவு

இராயப்பு யோசப் வட இலங்கையின் நெடுந்தீவில் 1940 ஏப்ரில் 16 ஆம் திகதி பிறந்தார். அவரது குடும்பம் முதலில் யாழ்பாணக் குடாநாட்டில் இளவாலைக்கும் அடுத்து வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளத்துக்கும் குடிபெயர்ந்தது. இராயப்பு யோசப் யாழ்ப்பாணத்தில் சென். பட்ரிக்ஸ் கல்லூரியிலும் அநுராதபுரத்தில் சென். யோசப் கல்லூரியிலும் கல்வி கற்றார். குருத்துவ வாழ்வை தொடங்கிய பிறகு அவர் முதலில் யாழ்ப்பாணத்தில் சென். மார்டின் செமினரியிலும் பிறகு கண்டி அமாபிட்டியவில் தேசிய செமினரியிலும் சேர்க்கப்பட்டார்.

இராயப்பு யோசப் 1967 டிசம்பரில் ஒரு மதகுருவாக திருநிலைப் படுத்தப்பட்டார். ரோமில் உள்ள பொன்ரி ஃபிக்கல் உர்பானினானா பல்கலைக்கழகத்தில் இருந்து கனன் சட்டத்தில் (Canon Law ) ஒரு கலாநிதி பட்டத்தை அவர் பெற்றார். அதன் விளைவாக அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் உள்ள சென். பிரான்சிஸ் சேவியர் செமினரியில் ஒரு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இராயப்பு யோசப் 1992 அக்டோபர் 20 ஆம் திகதி மன்னார் மறை மாவட்டத்தின் ஆயராக சென். செபஸ்தியன் தேவாலயத்தில் திருநிலைப் படுத்தப்பட்டார்.

மன்னாரும் வவுனியாவும்

மன்னார் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் முன்னர் யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். 2012 குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் மன்னார் நிருவாக மாவட்டத்தின் சனத்தொகையில் 56,932 பேர் ( 57.48 சதவீதம் ) கிறிஸ்தவர்களாக இருந்தனர். இலங்கையில் கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே மாவட்டமாக அதுவே விளங்கியது. 2012 குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் வவுனியா நிருவாக மாவட்ட சனத்தொகையில் 22, 820 பேர் ( 13.31 சதவீதம் ) கிறிஸ்தவர்களாக இருந்தனர். இரு மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்களாக இருந்தனர்.

மன்னார் மறைமாவட்டம் 1981 ஜனவரி 24 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. அதன் பரப்பளவு 3,998 சதுர கிலோமீட்டர்கள். 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருச்சபை மதிப்பீடுகளின் பிரகாரம் மன்னார் மறைமாவட்டம் 87,112 கத்தோலிக்கர்களைக் கொண்டது. அங்கு 46 பங்குகளில் 100 மதகுருமாரும் 214 மதகுருமார் அல்லாத ( 52 சகோதரர்களும் 162 சகோதரிகளும் ) 28 செமனரியன்களும் இருந்தனர். அந்த மறைமாவட்டத்தில் செமனரிகளும் கன்னியர் மடங்களும் வயோதிபர் இல்லங்களும் சிறுவர் இல்லங்களும் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக மன்னார் மறைமாவட்டம் 400 வருடங்களுக்கும் அதிகமான கால வரலாற்றுப் பெருமையுடைய புகழ்பெற்ற மடுமாதா தேவாலயத்தை தன்னகத்தே கொண்டிருக்கிறது.

புனித செபமாலை மாதா

மன்னாரில் போரின் விளைவான பல பிரச்சினைகளை ஆயர் இராயப்பு யோசப் எதிர்கொண்டார். மடு என்று அறியப்படும் மருதமடுவில் அமைந்திருக்கும் மரியாள் தேவாலயம் இலங்கையின் மிகவும் புனிதமான கத்தோலிக்க திருத்தலமாக பலராலும் போற்றப்படுகிறது. மடு திருத்தலம் தொடர்பான பிரச்சினைகள் ஆயர் இராயப்பு யோசப்புக்கு பெரிய சோதனைக் காலமாக அமைந்தது. மடுமாதா திருச்சுரூபத்தை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவரது செயற்பாடுகளுக்காக ஆயர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். நடந்தது இது தான்.

போரில் 2008 முற்பகுதி கட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் படிப்படியாக முன்னேறிய இராணுவம் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீளக்கைப்பற்றியது. விடுதலை புலிகள் எதிர்த்துச் சண்டையிட்டனர், ஆனால், படிப்படியாக பின்வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

அத்தகைய போர்ச் சூழ்நிலையில், மடுத் தேவாலயத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதற்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் கடுமையாக முயற்சி செய்தார். மடுப்பகுதி சமாதான வலயமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று ஆயர் இலங்கை அரசாங்கத்திடமும் விடுதலை புலிகளிடமும் திரும்பத்திரும்ப வேண்டுகோள் விடுத்தார். சித்திரை புத்தாண்டு அளவில் மடு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று 2008 மார்ச் இறுதியில் கொழும்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயுதப்படைகள் பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் சின்னப் பண்டிவிரிச்சானில் இருந்து மடு வனச்சரணாலயப் பகுதி ஊடாக மடு நோக்கி தீர்க்கமான இராணுவ நடவடிக்கையில் இறங்கின.

பாதுகாப்பு படைகள் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய நிலையில், விடுதலை புலிகளும் தங்களது தந்திரோபாயங்களை மாற்றினர். மடு தேவாலய சரணாலய வனப்பகுதிகளின் உள்ளே அவர்கள் தங்களது நிலைகளை அமைக்கத் தொடங்கினர். தேவாலயத்தின் வெளி வளாகத்திற்குள்ளும் விடுதலை புலிகள் வந்தனர். அவர்கள் தேவாலயத்திற்குள்ளோ அல்லது தேவாலய முற்றத்துக்கோ வரவில்லை. ஆனால், தேவாலயத்தின் வளாகப்பகுதி என்று வரையறுக்கப்பட்ட முகாமிடும் பகுதியைப் பயன்படுத்தத் தொடங்கினர். அது 70 ஏக்கர்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டது.

தேவாலய அதிகாரிகள் ஆட்சேபித்தபோது ” இந்த திசையில் மேலும் நகரவேண்டாம் என்று இராணுவத்தைக் கேளுங்கள். நாங்கள் விலகிச் சென்று விடுகிறோம் ” என்று விடுதலை புலிகள் கூறினர். ஆனால், பாதுகாப்பு படைகள் விடுதலை புலிகள் அவர்களின் பீரங்கிகளுடனும் மோட்டார்களுடனும் முதலில் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்று பதிலுக்கு வலியுறுத்தினர். இரு தரப்புகளும் தங்களது நிலைப்பாடுகளில் விடாப்பிடியாக நின்றனர். அதனால் மடு தேவாலயச் சுற்றாடல் இராணுவமயமானது.

மடு தேவாலய வளாகம்

மோதல் தீவிரமடைந்தது. ஷெல்கள் சரமாரியாக வந்து வீழ்ந்தன. மடு தேவாலய வளாகத்திற்குள்ளும் யாத்திரிகர்கள் முகாமிடும் பகுதிகளிலும் ஷெல்கள் வீழத்தொடங்கின. மதகுருமாரின் விடுதி, தேவாலயத்தின் வெளிவளாகம் மற்றும் குடிநீர்க்கிணறு ஆகியவற்றிலும் ஷெல்கள் விழுந்தன. தேவாலயம் நேரடியாக பாதிக்கப்படவில்லை. ஆனால், குண்டு வெடிப்புகளின் தாக்கத்தினால், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பாலம்பிட்டிக்கு செல்லும் வெளிவீதியில் தொடர்ச்சியாக ஷெல்கள் வந்து வீழ்ந்தன.

சகல குடிமக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர்.அத்தியாவசியமான கடமைகளுக்கு தேவையான ஊழியர்கள் பதுங்கு குழிகளுக்குள் தஞ்சமடைந்தனர். மோதல்கள் தணிந்த நேரங்களில் பதுங்கு குழிகளுக்குள் இருந்து வெளியே வந்து அப்புறப்படுத்தும் பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். மடுத் தேவாலயத்தை அண்டிய பகுதிக்குள் விடுதலை புலிகள் நகர்ந்த நிலையில் பாதுகாப்பு படைகளும் முன்னேறின. கடுமையான சண்டைகளுக்குள் மடு தேவாலயம் நேரடியாக சிக்கிக் கொள்ளப்போகிறது என்பதை தேவாலய அதிகாரிகள் புரிந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேற தீர்மானித்தார்கள்.

மடு தேவாலய வளாகமும் கூட பாதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகரிக்கத் தொடங்கின. குற்றச்சாட்டுகளும் பதில் குற்றச்சாட்டுகளும் மாறிமாறி முன்வைக்கப்பட்டன. புனித தலத்தில் போர் ஒன்றை நடத்துவதாக பாதுகாப்பு படைகளை குற்றஞ்சாட்டிய விடுதலை புலிகள் இராணுவத்தின் ஷெல்கள் தேவாலய வளாகத்திற்குள் விழுவதாக கூறினர். அந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இராணுவம் விடுதலை புலிகளை திருப்பிக் குற்றம் சாட்டியது. மோடடார்களை ஏவும் தளமாக தேவாலய வளாகத்தை பயன்படுத்துவதாக விடுதலை புலிகள் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை அவர்கள் உறுதியாக மறுத்தனர்.

ஆயரின் பகிரங்க வேண்டுகோள்

மடுவை ஒரு சமாதான வலயமாக மேணுமாறு இரு தரப்புகளிடமும் விடுத்த வேண்டுகோள்கள் பயன்தராத நிலையில், ஆயர் இராயப்பு யோசப் நேரவிருக்கும் அனர்த்தத்தை தவிர்த்து தேவாலயத்தின் புனிதத்தை பாதுகாக்கும் இறுதிநேர முயற்சி ஒன்றை மேற்கொண்டார். 2008 ஏப்ரில் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்த அவர் தேவாலயத்தையும் அண்டிய பகுதிகளையும் சமாதான வலயமாக பேணுமாறு இரு தரப்புகளையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

ஆயர் இராயப்புவின் அக்கறையுடனான வேண்டுகோள் உத்வேகம் அடைந்துகொண்டிருந்த போரின் கொடூரமான தர்க்கத்துக்கு நிகரானதாக இருக்கவில்லை. மடு பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்தன. விரிவடைந்த இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தேவாலயம் நேரடியான தாக்குதல் எல்லைக்குள் வந்துவிடக்கூடிய ஆபத்து தோன்றியது. அத்தகைய பின்புலத்தில் தேவாலயத்துக்கு சேதம் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகரித்தது.

அன்னை மரியாள் மற்றும் குழந்தை யேசுவின் புனித திருச்சுரூபங்களே மடுவின் மிகப்பெரிய பொக்கிசமாகும். சுரூபங்களுக்கு சேதம் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகமாக இருந்தது. அதனால் சுரூபங்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான வேதனைமிகு தீர்மானம் எடுக்கப்பட்டது.

முதலில் சுரூபங்களை மன்னாரில் உள்ள சென். செபஸ்ரியன் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதி என்பதால் விடுதலை புலிகள் அந்த திட்டத்தை ஆட்சேபித்தனர். தங்களது மையத் தளப்பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்துக்கு திருச்சுரூபங்களை எடுத்துச்செல்ல வேண்டும் என்று விடுதலை புலிகள் விரும்பினர். ஆயர் உட்பட திருச்சபை அதிகாரிகள் அதற்கு மறுத்தனர். சூடான வாதப் பிரதிவாதங்களுக்கு பிறகு ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு திருச்சுரூபங்கள் மன்னார் மாவட்டத்தின் தேவன்பிட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தேவன்பிட்டி கிளிநொச்சி மாவட்டத்தின் முளங்காவிலுக்கு அருகாமையால் உள்ளது.

மடுமாதா ஒரு அகதி

திருச்சுரூபங்கள் இடமாற்றப்படுகின்றன என்றும் மடுமாதா தனது சொந்த மண்ணிலேயே ஒரு அகதியாகிவிட்டார் என்றும் ஆயர் இராயப்பு பி.பி.சி.யின் தமிழ்ச் சேவையான ‘ தமிழோசைக்கு ‘ சோகத்துடன் கூறியதை கேட்டது உண்மையிலேய கவலையான தருணமாகும். அந்த அனர்த்தத்தை தவிர்ப்பதற்கு கடுமையாகப் பாடுபட்ட ஆயர் இராயப்பு யோசப்பை பொறுத்தவரை அது தனிப்பட்ட ஒரு துன்பியல் நிகழ்வாகும். அவர் மிகவும் தவறாக விளங்கப்பட்ட ஒருவராக இருந்தார்.

ஆயர் இராயப்பு மடுவின் புனிதத்தன்மையை பேணிப்பாதுகாப்பதற்கு மிகவும் கடுமையாக முயற்சித்தார். தேவாலயத்தை சேதப்படுத்தக்கூடிய இராணுவ நடவடிக்கையை அவர் தவிர்க்க விரும்பினார். ஆனால், அவர் எதற்கு பெரிதும் அஞ்சினாரோ அது இறுதியில் நடந்தே விட்டது.

இடம்பெயர்ந்தவர்களுடன் மடுமாதாவும் இணைந்துகொண்டது இராயப்பு யோசப்பை பெரும் பரிதாபமான நிலைக்கு உள்ளாக்கியது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தேவன்பிட்டிக்கு திருச்சுரூபங்களை கொண்டுசெல்வதற்கு அனுமதியளித்தமைக்காக அவர் விடுதலை புலிகளின் ஒரு முகவர் என்று அநியாயமாக விமர்சிக்கப்பட்டார். புனித சுரூபம் என்றென்றைக்குமே காணாமல்போய்விடும் என்று பலர் அஞ்சினார்கள். ஆண்டவர் கருணையால் அது ஒருபோதும் நடக்கவில்லை.

மடுவில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்

இருளுக்கு பிறகு ஔி பிறந்தது. மடுமாதா தனது தலத்துக்கு மீண்டும் வந்தார். கொடிய போர் முடிவுக்கு வந்து ஒரு சஞ்சலமான அமைதி தோன்றியது. வழமைநிலை படிப்படியாக மடுவுக்கு திரும்பியது. 2015 ஜனவரியில் ஆயர் இராயப்பு யோசப் பேருவகையுடன் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை மடுவில் வரவேற்றார்.

2015 ஜனவரி 14 ஆம் திகதி மடு தேவாலயத்தில் நடைபெற்ற மரியாள் ஆராதனை ஒன்றில் பாப்பரசர் பிரான்சிஸ் பங்கேற்றார்.
” மடுமாதாவின் வேண்டுதலின் ஊடாக இந்த அன்புக்குரிய மண்ணின் சகல பிள்ளைகளுக்கும் நல்லிணக்கம், நீதி மற்றும் சமாதானம் நிறைந்த ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு சகல மக்களுக்கும் உற்சாகமும் பலமும் கிட்டுவதாக” என்று அவர் கூறினார். இறுதியில் ஆயர் இராயப்பு யோசப் நியாயப்படுத்தப்பட்டார்.

ஆயர் இராயப்பு யோசப்பின் நீணடகால சேவையில் விரிவாக கூறுவதற்கு பெறுமதிகொண்ட பலபல அனுபவங்களும் நிகழ்வுகளும் இருக்கின்றன. ஆனால், அவர் மன்னார் மறைமாவட்டத்தின் கத்தோலிக்க ஆயராக எத்தகைய படுமோசமான சூழ்நிலையிலும் காலத்திலும் தனது கடமைகளை நிறைவேற்றினார் என்பதை வெளிச்சம் போடடுக் காட்டும் ஒரு முயற்சியாக மடுமாதா தேவாலய நெருக்கடி மீது மாத்திரம் கவனத்தைச் செலுத்தினேன். அவர் முகங்கொடுத்த இடர்பாடுகளையும் எல்லாம் வல்ல ஆண்டவரின் பார்வையில் தனக்கு சரியானது என்று தெரிந்தவற்றை செய்வதில் காட்டிய தைரியத்தையும் காட்டுவதற்கு மடு சம்பவம் பிரகாசமான ஒரு உதாரணமாகும்.

தகைசால் ஆயர்

ஆயர் யோசப் தனது 75 வது பிறந்ததினத்தை 2015 ஏப்ரில் 16 ஆம் திகதி கொண்டாடினார். கத்தோலிக்க ஆயர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கான வயதை அவர் அடைந்தார். மன்னார் மறைமாவட்டத்தின் திருத்தொண்டுப் பொறுப்பில் இருந்து 2016 ஜனவரி 14 ஆம் திகதி அவர் விலகினார். ஆண்டவருக்கும் திருச்சபைக்கும் மனிதகுலத்துக்குமான பல வருடகால அர்ப்பணிப்புடனான சேவையின் பின்னர் மகிழ்வுநிறைந்த ஓய்வு நிலைக்குள் அவர் பிரவேசித்தார்.

தகைசால் ஆயராக ( Emiritus Bishop ) இராயப்பு யோசப் மன்னார் ஆயர் இல்லத்தின் ஒரு பிரிவில் வாழ்ந்தார். ஓய்வுபெற்ற ஆயராக இருந்த போதிலும் கூட, தனது வாழ்வையும் காலத்தையும் அவர் பிரதிபலித்தார். அர்ப்பணிப்புச் சிந்தையுடனான அவரது குருத்துவக் காலத்தையும் சேவையையும் நன்றியுணர்வுடன் மெச்சிய பெருமளவு மக்கள் தொடர்ச்சியாக அவரை வந்து சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்கள்.

உடல்நலம் குன்றத் தொடக்கியதன் விளைவாக தகைசால் ஆயர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் கத்தோலிக்க திருச்சபையினால் நடத்தப்படும் திருச்சிலுவை சகநல நிலையத்துக்கு இராயப்பு யோசப் 2021 முற்பகுதியில் கூட்டிச் செல்லப்பட்டார். தனது 81 வது பிறந்ததினத்துக்கு 15 நாட்கள் முன்னதாக 2021 ஏப்ரில் முதலாம் திகதி அவர் அமைதியாக தனது இறுதிமூச்சை விட்டார்.

ஆழமான கவலை

அவரது மறைவினால் பொதுவில் இலங்கைத் தமிழர்களும் குறிப்பாக கத்தோலிக்ர்களும் ஆழமான சோகத்தில் ஆழ்ந்தனர். மன்னாரில் இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக ஆயராக சேவைசெய்த இராயப்பு யோசப் அவரது மக்கள் மற்றும் சக மேய்ப்பர்கள் மத்தியில் பேரளவு பிரபல்யம் கொண்டவராக விளங்கினார். சமூகத்தை பாதித்த பிரச்சினைகளுக்காக வெளிப்படையாக துணிச்சலுடன் குரல் கொடுத்தமைக்காக பரந்தளவில் தமிழ் மக்கள் அவரை நேசித்தார்கள்.

தன்னியல்பாகவே மக்கள் இராயப்பு யோசப்பின் மறைவுக்கு கவலையும் அனுதாபமும் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு அருகாமையில் தேவாலயத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கில் திரண்டுவந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர். பெரிதும் மதிக்கப்பட்ட — நேசிக்கப்பட்ட ஆயரின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. மனானாரில் பெருந்திரளான மக்கள் தங்கள் ஆயருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மன்னாரின் தகைசால் ஆயரின் இறுதிச் சடங்குகள் மன்னார் சென். செபஸ்தியன் தேவாலயத்தில் 2021 ஏப்ரில் 5 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றன. கொழும்பு அதிமேற்றிராணியார் மல்கம் கார்டினல் ரஞ்சித் உட்பட அனேகமாக இலங்கையின் சகல கத்தோலிக்க ஆயர்களும் இறுதி ஆராதனையில் கலந்துகொண்டனர். சென். செபஸ்தியன் தேவாலய வளாகத்தில் முன்னாள் மன்னார் ஆயரின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது

துக்கதினம்

மன்னார் மாவட்டம் முழுவதும் 2021 ஏப்ரில் 5 ஆம் திகதி துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டது. எங்குமே கறுப்பு, வெள்ளைக் கொடிகள் பறந்தன. மன்னார் நகரில் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. பின்னர் சிறிது காரம் கழித்து மன்னார் நகரின் மத்தியில் ஆயர் யோசப்புக்கு சிலை எழுப்பப்பட்டது.

பல வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைப் பேட்டியொன்றில் ஆயர் இராயப்பு யோசப்பிடம் அவருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பெருவாரியான கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பதிலளித்த அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிராகரித்து உண்மையான விடயங்களை தெளிவுபடுத்தினார். பின்வருமாறு கூறியதன் மூலம் அவர் தனது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கினார் ;

பிரதம மேய்ப்பரின் முதன்மையான பாத்திரம்

” மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராகவும் நான் இருக்கிறேன். மறைமாவட்ட மக்கள் கடுமையான ஒடுக்குமுறைக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களின் சார்பில் பேசுவதை எனது முதன்மையான பாத்திரமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். என்னால் செய்யக்கூடியதாக இருப்பவையும் கூறக்கூடியதாக இருப்பவையும் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்தாலும் கூட இலங்கையிலும் அதற்கு அப்பாலும் உள்ள ஏனையவர்களைப் பற்றியும் நான் கரிசனை கொண்டிருக்கிறேன். பிரதம மேய்ப்பராக நான் நியமிக்கப்பட்டிருக்கும் பகுதியின் மக்களின் வேதனைகள் மீது அக்கறை கொண்டவனாக இருக்கிறேன்.”

ஆயர் இராயப்பு யோசப் மன்னார் மறைமாவட்டத்தில் குரலற்றவர்களின் குரலாக விளங்கி, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு உண்மையை உரைத்த ஒரு பெருமகன்.

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror)

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************