எஸ். ஜே.வி. செல்வநாயகம் ; மதத்தால் கிறிஸ்தவராகவும் கலாசாரத்தால் இந்துவாகவும் விளங்கிய ‘ காந்தியவாத’ தமிழ் அரசியல் தலைவர்


டி. பி.எஸ். ஜெயராஜ்

” சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் இபோவில் பிறந்தார்…. மலேசியாவில் மிகவும் தூய்மையான நகரம் என்று பெயரெடுத்தது இபோ. அதனால்தான் போலும் செல்வநாயகத்தின் வாழ்வு சமகால அரசியலில் அறியப்படாத ஒரு தூய்மையைக் குறித்து நின்றது.” — எஸ். ஜே.வி. செல்வநாயகத்தின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீது 1977 செப்டெம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அன்றைய வர்த்தக அமைச்சர் லலித் அத்துலத் முதலி இவ்வாறு கூறினார்.

அந்த அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றிய அன்றைய பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தன, ” செல்வநாயகம் உங்களை கைவிட்டு விடக்கூடியவர் அல்லது ஏமாற்றிவிடக்கூடியவர் என்று கூறிய ஒருவரை எனது சமூகத்திலோ அல்லது வேறு எந்த சமூகத்திலோ நான் சந்தித்ததில்லை” என்று கூறினார். இந்த கருத்துக்கள் ” நலிந்த உடலைக் கொண்டவரான செல்வநாயகம் வடக்கின் முடிசூடா மன்னாகவே அறியப்படுகிறார். அவரின் நேர்மைக்கு அவரின் எதிரிகளும் மனமுவந்து சான்றுரைப்பார்கள் “ என்று பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா 1963 ஆம் ஆண்டில் எழுதியதை அங்கீகரித்து நின்றன.

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் இபோ நகரில் 1898 மார்ச் 31 ஆம் திகதி பிறந்தார். கடந்த மார்ச் 31 ஆம் திகதி அவரது 127 வது பிறந்த தினமாகும். அவர் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையை சேர்ந்தவர். அவரது தந்தையார் விஸ்வநாதன் வேலுப்பிள்ளை மலேசியாவில் ஒரு வர்த்தகர். தாயார் ஹரியட் அன்னம்மாவின் கன்னிப்பெயர் கணபதிப்பிள்ளை.

பிள்ளைகள் சிறந்த கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக செல்வநாயகத்துக்கு நான்கு வயதாக இருந்தபோது தந்தையாரை தவிர, குடும்பம் தெல்லிப்பழைக்கு குடிபெயர்ந்தது. புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரான செல்வநாயகம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியிலும் இறுதியாக கல்கிசை சென். தோமஸ் கல்லூரியிலும் ( அப்போது அது கொழும்பு முகத்துவாரத்தில் இருந்தது) தனது கல்வியைப் பெற்றார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஆனந்தநாயகம் பின்னர் ஒரு கட்டத்தில் சென்.தோமஸ் கல்லூரியின் வார்டனாக (அதிபர்) பணியாற்றினார். செல்வநாயகமும் எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவும் அந்த கல்லூரியில் ஏககாலத்தில் படித்தவர்கள். ஆனால், பிறகு அரசியலில் மோதிக்கொண்டார்கள்.

செல்வநாயகம் முதலில் லண்டன் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக படித்து (பி.எஸ்.சி. ) பட்டதாரியானார். அதையடுத்து அவர் சென். தோமஸ் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். பிறகு கொழும்பு லெஸ்லி கல்லூரியிலும் படிப்பித்த அவர் ஆசிரியராக இருந்துகொண்டு சட்டக்கல்வியை தொடர்ந்தார். அதில் சித்தியடைந்ததும் உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக சேர்ந்து கொண்டார். பிரதானமாக சிவில் வழக்குகளுடன் தனது சட்டத்தொழிலை மட்டுப்படுத்திக்கொண்ட அவர் அதன் மூலமாக நன்கு சம்பாதித்தார். நன்கு மதிக்கப்ட்ட ஒரு சிவில் வழக்கறிஞரான அவர் நாளடைவில் இராணி அப்புக்காத்து (கியூ.சி.) ஆனார்.

செல்வநாயகம் 1927 ஆம் ஆண்டில் தெல்லிப்பழையின் மணியகாரர் ( நிருவாகப் பிரதானி ) ஆர்.ஆர். பார் குமாரகுலசிங்கியின் மகள் எமிலி கிறேஸ் பார் குமாரகுலசிங்கியை திருமணம் செய்து கொண்டார். ஆங்கிலக் கல்வியைப் பெற்ற அன்றைய மேட்டுக்குடியினர் வழக்கமாக அணியும் மேற்கத்தைய பாணி உடைக்குப் பதிலாக செல்வநாயகம் தனது திருமணத்தின்போது தமிழ்த்தேசிய ஆடையான வேட்டி, சால்வையை அணிந்தார்.

தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கலாசாரம் மீதான செல்வநாயகத்தின் பாசம் அரசியல் நோக்கங்களுக்காக செயற்கையான முறையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்று அல்ல. அது ஆழமான இயல்புணர்ச்சியின் விளைவானது. அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக அவர் தன்னை யாழ்ப்பாணத்தவர் என்றே எப்போதும் சொல்வார். வீட்டில் சாத்தியமான அளவுக்கு அவர் வேட்டியையே கட்டியிருப்பார். சட்ட அல்லது உத்தியோகபூர்வ அலுவல்கள் அல்லது பல்வேறு சமூகத்தவர்கள் கலந்துகொள்ளும் ஒன்றுகூடல்களை தவிர மற்றும்படி செல்வநாயகம் தமிழர்களுடன் தமிழில் தான் உரையாடுவார். ஒரு தமிழ்க் கல்விமானாக இல்லாவிட்டாலும் கூட பண்டைய தமிழ் இலக்கியங்களுடன் நன்கு பரிச்சயமானவராக விளங்கிய அவர் கர்நாடக சங்கீதத்தையும் பரதநாட்டியத்தையும நன்கு இரசிப்பார்.

தமிழ்க் கலாசாரத்துடன் இத்தகைய நெருக்கத்தைக் கொண்டிருந்த போதிலும், அதேயளவுக்கு கிறிஸ்தவ மதத்திலும் நம்பிக்கைகளிலும் பற்றுறுதி கொண்டவராக செல்வநாயகம் விளங்கினார். தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாணப் பங்கின் ஒரு உறுப்பினரான அவர் கொழும்பில் அங்கிளிக்கன் தேவாலயத்தின் ஆராதனைகளில் பங்கேற்றார். ஆனால், வெள்ளவத்தையில் தென்னிந்திய திருச்சபை தேவாலயம் ஒன்றை திறந்த பிறகு கூடுதலாக அங்கு வந்து வழிபட்டார். அவரது கிறிஸ்தவம் அரசியல் பணிக்கு ஊக்கம் அளித்தது.

சாமுவேல் , ஜேம்ஸ் என்பவையே செல்வநாயகத்தின் கிறிஸ்தவப் பெயர்களாக இருந்தபோதிலும், விவிலியத்தில் வரும் மோசஸ் தான் அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். பின்னரான நாட்களில் அவர் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தனது மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுத்து செழிப்புமிக்க — வாக்களிக்கப்பட்ட பூமிக்கு அழைத்துச் செல்லும் ஒரு மோசஸாகவே தன்னைப் கருதிக்கொண்டார்.

செல்வநாயகத்தின் மறைவுக்கு பிறகு வெள்ளவத்தை தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் இடம்பெற்ற நினைவு ஆராதனையில் ஆயர் டி.ஜே. அம்பலவாணர் ‘ என் மக்களை போக விடு ‘ (let my people go) என்ற வேதாகம வசனத்தின் (Exodus 5.1) கீழ் மனதைத் தொடும் பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தினார். குறிப்பிட்ட அந்த விவிலிய வரிகள் மோசஸ் மற்றும் பார்வோன் (Pharaoh) உடனும் எகிப்தில் உள்ள இஸ்ரவேலருடனும் தொடர்புடைய பழைய ஏற்பாட்டில் உள்ளவையாகும்.

குறிப்பிட்ட சில அரசியல் பிரச்சினைகளைப் பற்றி சந்தேகம் வந்து உறுதியான தீர்மானத்தை எடுக்கமுடியாமல் இருந்த நேரங்களில் செல்வநாயகம் அமைதியாக தியானத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபடுவார் என்று அவரது அரசியல் சகாக்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது அவரது துணிவாற்றலை வலுப்படுத்தியது. பிரார்த்தனைக்கு பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்ததும் அதில் அவர் உறுதியாக இருப்பார். எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யமாட்டார்.

இந்துப் பண்புகள் மீதும் பற்று

இந்த கிறிஸ்தவ நம்பிக்கைக்கு மத்தியிலும் செல்வநாயகம் பெரும்பான்மையான ஒரு சைவச் சூழலில் இந்துப் பண்புகளையும் உள்வாங்கிக்கொண்டார். அவரது நெருங்கிய உறவினர்கள் பலர் இந்துக்களாகவும் இருந்தனர். தமிழ்க் கலாசாரம் மீதான அவரது பற்று இந்துப் பண்புகள் நோக்கி அவரை ஈர்த்தது. இதனால் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் தன்னை மதத்தால் கிறிஸ்தவர் என்றும் கலாசாரத்தால் இந்து என்றும் கூறக்கூடியதாக இருந்தது. அரசியல் அனுகூலத்துக்காக அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுக்கவில்லை என்பது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

செல்வநாயகத்தின் பாராளுமன்ற தொகுதியான காங்கேசன்துறையிலும் தமிழ்ச் சமூகத்திலும் அதிகப் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே. இந்து தமிழர்கள் மீது அவர் அன்பைக் கொண்டிருந்தாலும் அரசியல் ஆதரவை வளர்த்துக் கொள்வதற்காக அவர் அவ்வாறு செயற்கையாக நடந்து கொண்டதில்லை. அரசியலுக்கு வருவது குறித்து நினைப்பதற்கு முன்னரேயே அந்த பண்புகளை அவர் மனதில் பதியவைத்துக் கொண்டார்.

அரசியல் பயன்களுக்காக செல்வநாயகம் மதக் கோட்பாடுகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதே உண்மை. அவரது ‘ கிறிஸ்தவத்தை ‘ அரசியல் எதிரிகள் அவருக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தினார்கள். அவரது தமிழ் அரசியல் போட்டியாளர்கள் மதக்கூச்சலை தொகுதி மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பல தடவைகள் கிளப்பினார்கள். இந்துக்களுக்கே உரித்தான தமிழ்த் தலைமைத்துவத்தை அபகரிக்க முயற்சித்த ஒரு கிறிஸ்தவ வெளியாளாக அவர் காண்பிக்கப்பட்டார். இலங்கை தமிழரசு கட்சி முதன் முதலாக போட்டியிட்ட 1952 பொதுத் தேர்தலில் அது தீவிரமாகக் கூறப்பட்டது. 1956 ஆம் ஆண்டுக்கு பிறகு பொருட்படுத்தக்கூடிய எந்தவொரு அரசியல்வாதியும் செல்வநாயகத்துக்கு எதிராக கிறிஸ்தவ விரோதக் கூச்சலை வெளிப்படையாக கிளப்புவதற்கு துணிச்சல் கொள்ளவில்லை. ஆனால், மறைமுகமாக அது குசுகுசுக்கப்பட்டது.

மாவிட்டபுரம் போராட்டம்

1970 தேர்தலின்போது இது விடயத்தில் ஒரேயொரு விதிவிலக்காக இருந்தவர் பேராசிரியர் சி. சுந்தரலிங்கம் எனலாம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் 1968 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களின் ஆலயப் பிரவேசத்துக்கு எதிரான இயக்கம் ஒன்றை அவர் முன்னெடுத்தார். அந்த இயக்கத்தில் அவரின் பாத்திரம் அவருக்கு காங்கேசன்துறை தொகுதிக்குள் வருகின்ற மாவிட்டபுரம் பகுதியில் சாதி அபிமானம் கொண்ட பல உயர்சாதி இந்துக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது.

அந்த சர்ச்சையில் இருந்து செல்வநாயகமும் தமிழரசு கட்சியினரும் பொதுவில் விலகியே இருந்தனர். ஆனால், ஆலயப் பிரவேசத்துக்கு உரிமை கோரிப் போராடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அவர்கள் தார்மீக ஆதரவை வழங்கினர். காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், அந்த பிரச்சினையில் செல்வநாயகம் நேரடியாக சம்பந்தப்படாததால் வெறுப்படைந்திருந்த பழமைவாதப் போக்குடைய தமிழ் வட்டாரங்கள் மத்தியில் தனக்கு ஆதரவைத் தேடுவதற்கு சுந்தரலிங்கம் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதில் நாட்டம் காட்டினார். அதனால் அவர் அப்பட்டமாகவே செல்வநாயகத்துக்கு எதிராக கிறிஸ்தவ விரோதப் பிரசாரத்தை தூண்டிவிட்டார்.

வெள்ளியிலான வேல் ஒன்றையும் மரத்தாலான சிலுவை ஒன்றையும் காங்கேசன்துறை தொகுதியெங்கும் சுந்தரலிங்கம் கொண்டுதிரிந்தது அந்த பிரசாரத்தின் ஒரு அட்டகாசமான அம்சமாகும். அவற்றை உயர்த்திக் காண்பித்து ” வேலா சிலுவையா ? ” என்று மக்களைப் பார்த்து சுந்தரலிங்கம் உரத்துக் கேட்டார். ஆனால், காங்கேசன்துறை தொகுதியின் அதிகப் பெரும்பானமையான இந்து வாக்காளர்கள் செல்வநாயகத்தை மீண்டும் தெரிவுசெய்து சுந்தரலிங்கத்துக்கு சரியான ஒரு பதிலைக் கொடுத்தனர்.

1952 தேர்தலில் மாத்திரம் தோல்வி

இரு இடைவெளிகளை தவிர, 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டு வரை செல்வநாயகம் காங்கேசன்துறை தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். முதலாவது இடைவெளி 1952 — 56 காலப்பகுதியாகும். 1952 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சுப்பையா நடேசபிள்ளையிடம் செல்வநாயகம் தோல்வி கண்டார். இரண்டாவது இடைவெளி 1972 அக்டோபர் — 1975 பெப்ரவரி காலப்பகுதி. 1972 ஆம் ஆண்டில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிவியில் இருந்து விலகிய செல்வநாயகம், 1972 அரசியலமைப்பை தமிழர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் ஒரு வழிவகையாக காங்கேசன்துறையில் இடைத்தேர்தலை நடத்துமாறு அன்றைய பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்கவுக்கு சவால் விடுத்தார். நீண்ட கால தாமதத்துக்கு பிறகு இறுதியில் 1975 ஆண்டில் இடைத் தேர்தலை அரசாங்கம் நடத்தியது. அதில் செல்வநாயகம் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளினால் பெருவெற்றி பெற்றார்.

1952 பொதுத்தேர்தலில் மாத்திரமே செல்வநாயகம் தோல்வி கண்டார். அப்போதுதான் தமிழரசு கட்சி வளர்ந்துகொண்டிருந்த நிலையில் தமிழ் வாக்காளர்கள் அதன் கொள்கைகளினால் பெரிதாக கவரப் பட்டிருக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜீ.ஜீ. பொன்னம்பலம் தொடர்ந்தும் தமிழர் அரசியலை ஆதிக்கம் செய்து கொண்டிருந்தார். புதிய கட்சியின் தலைவரான செல்வநாயகம் தான் போட்டியிட்ட தொகுதியை விடவும் கட்சியின் சார்பில் மற்றைய தொகுதிகளில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்காக பிரசாரங்களில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்.

செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட நடேசபிள்ளை தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயமாக அமைச்சராக வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியமாக இருந்தது. இந்த காரணங்கள் எல்லாம் சேர். பொன்னம்பலம் இராமநாதனின் மருமகனான நடேசபிள்ளை தெரிவாவதற்கு அனுகூலமானவையாக அமைந்தன. அத்துடன் செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர் என்ற பிரசாரமும் தனிப்பட்ட முறையிலும் பகிரங்கமாகவும் பயன்படுத்தப்பட்டது.

தேர்தல் பிரசாரத்தின்போது தமிழரசு கட்சியின் சகல வேட்பாளர்களும் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு ஒரு விசேட பூசைக்காக சென்றனர். செல்வநாயகமும் அங்கு சென்று மேலங்கி இல்லாமல் கைகளைக் கட்டிய வண்ணம் நின்றார். இந்து சமய முறைப்படி காளாஞ்சி வழங்கப்படும்போது செல்வநாயகம் அதனை ஏற்றுக்கொள்வதைப் படம்பிடிக்க வேண்டும் என்று முன்னாள் ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வீ. நவரத்தினம் விரும்பினார்.

காங்கேசன்துறை தொகுதியில் நிலவிய கிறிஸ்தவ விரோத பதற்றத்தை தணிப்பதற்கான ஒரு முயற்சியாக, கிறிஸ்தவராக இருந்த போதிலும் செல்வநாயகம் இந்துச் சடங்காசாரங்களையும் அனுஷ்டிக்கும் ஒரு மனிதர் என்று காண்பிப்பிப்பதே நவரத்தினத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால், படம் பிடிக்கப்படுவதற்கு மறுத்த செல்வநாயகம் இந்து மதத்தை தான் மதிக்கின்ற போதிலும், வாக்குகளுக்காக வழிபாட்டு பாசாங்குகளில் ஈடுபடுமளவுக்கு தாழ்ந்துபோக விரும்பலில்லை என்று கூறினார். அத்தகைய ஏமாற்று வேலைகளைச் செய்து வெற்றி பெறுவதிலும் பார்க்க தோல்வி காண்பது மேல் என்று அவர் கூறினார். அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.


கிறிஸ்தவ விரோத பிரசாரங்கள்

மதம் ஒரு இடையூறாக இருந்ததனால் 1952 தேர்தலில் தோல்வி கண்ட அதே மனிதர் காங்கேசன்துறை தொகுதியில் தொடர்ச்சியாக ஆறிற்கு மேற்பட்ட தடவைகள் ( 1956, 1960 மார்சு, 1960 ஜூலை, 1965, 1970, 1975) வெற்றிபெற்றார். தனது மதக் கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காமலும் மதரீதியான வாதங்களில் ஈடுபடாமலும் அவர் அந்த சாதனையை செய்து காட்டினார்.

இந்து பெரும்பான்மை தமிழர்களுக்கு தலைமை தாங்குவதில் செல்வாவுக்கு இருக்கும் உரிமையை கேள்விக்குள்ளாக்கி கிறிஸ்தவ பூச்சாண்டியைக் காட்டி தமிழரசு கட்சியின் நம்பகத்தன்மையை மலினப்படுத்தும் வகையிலான முயற்சிகளையும் அரசியல் எதிரிகள் முன்னெடுத்தார்கள். அத்தகைய பிரசாரங்களை செல்வாயகத்தின் ‘ இந்து ‘ தளபதிகள் உறுதியான முறையில் முறியடித்தார்கள்.

இன்னொரு கருத்துக் கோணத்திலும் கூட காங்கேசன்துறையில் ( 83 சதவீதம் இந்துக்கள், 16 சதவீதம் கிறிஸ்தவர்கள்) செல்வநாயகத்தின் தொடர்ச்சியான வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர் மக்களின் அன்றாட அலுவல்களை கவனிக்கும் ஒரு பாரம்பரியமான பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. தமிழ் மக்களின் பரந்தளவிலான அரசியல் சார்ந்த பிரச்சினைகள் மீதே அவர் பெருமளவுக்கு கவனம் செலுத்தினார். பிறகு உடல்நலம் குன்றத்தொடங்கியதும் அவர் தொகுதிக்கும் அடிக்கடி வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சினைகள் எல்லாம் இருந்த போதிலும் கூட காங்கேசன்துறை வாக்காளர்கள் செல்வாவை தொடர்ந்து தெரிவு செய்தார்கள். முன்னாள் செனட்டரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவருமான (பொட்டர்) எஸ். நடராஜாவே அந்த மக்களின் நலன்களை கவனிக்கும் பணிகளைச் செய்து காங்கேசன்துறை தொகுதியின் உத்தியோகபூர்வமற்ற பாராளுமன்ற உறுப்பினர் போன்று விளங்கினார்.

செல்வநாயகத்தின் மதத்தை மக்கள் கருத்தில் எடுக்கவில்லை.தமிழரசு கட்சியே தொடர்ந்தும் முதன்மையான தமிழ் அரசியல் சக்தியாக விளங்கியது. கிறிஸ்தவ விரோத முயற்சிகள் நுணுக்கமான முறையில் தொடரவே செய்தன. அவற்றில் ஒன்று யாழ்ப்பாணத்தில் இந்து பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் காங்கிரஸின் கோரிக்கையாகும். திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் கோரிக்கைக்கு எதிராகவே அந்த கோரிக்கையை தமிழ் காங்கிரஸ் முன்வைத்தது. அது மத அடிப்படையில் தமிழரசு கட்சிக்கும் செல்வநாயகத்துக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதை மாத்திரமல்ல, யாழ்ப்பாண இந்து வாக்காளர்களை கவருவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமிட்ட ஒரு தந்திரோபாயமாகும்.

தமிழ் மக்களின் மதசார்பின்மை

செல்வநாயகத்தை மலினப்படுத்தி தலைமைத்துவத்தில் இருந்து அவரை அகற்றுவதற்கு தமிழ் அரசியல் போட்டியாளர்கள் ஒருபுறத்தில் முயற்சித்துக் கொண்டிருந்த அதேவேளை, சிங்களவர்கள் மத்தியிலும் குறிப்பிட்ட சில பிரிவினர் அவரின் தலைமைத்துவத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட்டார்கள். இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர்களுக்கு கிறிஸ்தவரான செல்வநாயகம் பொருத்தமான ஒரு தலைவர் அல்ல என்று கூறி அவர்கள் அவருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதில் நாட்டம் காட்டினார்கள். இருந்தாலும் செல்வநாயகம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். மத அடிப்படையில் எந்த விதமான விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் தொடர்ச்சியாக அவர் காங்கேசன்துறை மக்களினால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு வந்தார். அவரின் வெற்றிகள் அடிப்படையில் தமிழ் மக்களின் மதசார்பற்ற மனோபாவத்துக்கும் இலங்கையில் இந்து மதத்தில் காணப்பட்ட சகிப்புத்தன்மைக்கும் கிடைத்த ஒரு மதிப்பாகும்.

இது தொடர்பில் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்றை நினைவுபடுத்த வேண்டியது பொருத்தமானதாகும். சிலோன் டெயிலி நியூஸ் பத்திரிகையில் 1970 அக்டோபர் 3 ஆம் திகதி வண. ஹேவன்பொல ரத்னசார தேரர் எழுதிய கடிதம் ஒன்றுக்கு பதிலளித்த செல்வநாயகம் ,” என்னை கிறிஸ்தவன் என்று குறிப்பிட்டிருக்கும் நீங்கள் மதத்தால் பிரதானமாக இந்துக்களாக இருக்கும் தமிழர் தமிழர்களுக்கும் எனக்கும் ஒற்றுமை எதுவும் கிடையாது என்று கூறியிருக்கிறீர்கள். தங்களுக்கு தலைமை தாங்குவதற்காக எங்களது மதத்தை மாற்றிக்கொள்ளுமாறு என்னையோ அல்லது வேறு எந்த கிறிஸ்தவரையுமோ நிர்ப்பந்திக்கவில்லை என்பதற்காக இந்து மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்” என்று எழுதினார். இது ” டொனமூர் பௌத்தர்கள் ” என்ற ஒரு தோற்றப்பாட்டை பற்றிய குறிப்பு என்பது தெளிவானது. டொனமூர் அரசியலமைப்பின் கீழ் சர்வஜனவாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தங்களது தேர்தல் வெற்றி வாய்ப்புக்களுக்காக சில சிங்கள கிறிஸ்தவர்கள் பௌத்தர்களாக மாறினார்கள். 1960 — 65 காலப்பகுதியிலும் கூட செல்வநாயகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இந்த அடிப்படையில் சில தொடர்பாடல்கள் இடம்பெற்றன.

தேசியவாத மறுமலர்ச்சி

காலனித்துவத்துக்கு எதிரான சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் தேசியவாத மறுமலர்ச்சிகளில் குறிப்பிட்ட சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றின் முக்கியமான அம்சமாக மதமே இருந்தது.அநகாரிக தர்மபாலவினாலும் ஆறுமுக நாவலரினாலும் முன்னெடுக்கப்பட்ட மறுமலர்ச்சிவாதம் மதத்தை அதாவது முறையே பெளத்தத்தையும் இந்துமதத்தையும் அடியொற்றியதாக அமைந்தது. ஆனால், காலனித்துவத்துக்கு பின்னரான இந்த மறுமலர்ச்சிவாத இயக்கத்தின் தொடர்ச்சி ஒரு பெரிய வேறுபாட்டைக் கண்டது. சிங்கள அரசியல் கருத்தாடல் சிங்கள பௌத்த தேசியவாத உணர்வுடன் தொடர்ந்தது. அதுவே சிங்கள மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய கோட்பாடாக விளங்கியது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களை சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக பார்த்தார்கள். அதனால் எதிர்வினை வேறுபட்டதாக இருந்தது. அது மதத்தையல்ல, மொழியை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. சிங்கள தேசியவாதத்துக்கு எதிராக தமிழ்த் தேசியவாதம் கிளம்பியபோது அது பெருமளவுக்கு மதச்சார்பற்றதாக மாறியது.

அது ஒரு தமிழ் இந்துத் தேசியவாதமாக இருக்கவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தன. எஸ். ஜே.வி. செல்வநாயகமும் தமிழ்க் கத்தோலிக்க கல்விமான் வணபிதா சேவியர் தனிநாயகம் அடிகளாரும் இதற்கு பங்களிப்புச் செய்த முக்கியமான இரு காரணகர்த்தாக்களாவர். உலகம் பூராவும் தமிழியல் ஆய்வு மீது அக்கறையை ஊக்கவிப்பதன் மூலம் தனிநாயகம் அடிகளார் ஒரு தமிழ்க் கலாசார மறுமலர்ச்சியை முன்னெடுத்தார். அவரின் பணிகள் தமிழர்களை அவர்களது புகழ்மிக்க பாரம்பரியம் குறித்து பெருமைப்பட வைத்தது.

செல்வநாயகம் சிங்களத் திணிப்புக்கு எதிரான தமிழ் அரசியல் இயக்கத்துக்கு தலைமைதாங்கி வழிநடத்தினார். தமிழ்க்கப்பலின் மகத்தான மாலுமியாக அவரது செயற்பாடுகள் மொழியை மையமாகக் கொண்ட மதசார்பற்ற தமிழ்த் தேசியவாதப் பாதையொன்றை வகுத்தது. மொழியை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தின் முனைப்பு தமிழ் இந்துக்களையும் தமிழ் கிறிஸ்தவர்களையும் மாத்திரமல்ல ” தமிழ்பேசும் மக்கள் ” என்ற கோட்பாட்டின் கீழ் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் முஸ்லிம்களையும் உள்ளடக்குகிற அளவுக்கு வெற்றிகரமானதாக விளங்கியது. ஒரு பற்றார்வத்துடனும் குறிக்கோளுடனும் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த மனிதர் தானாக விரும்பி அரசியலுக்கு வந்த ஒருவரல்ல.

உயர்நீதிமன்ற நீதிபதியாக வரவேண்டும் என்பதே செல்வநாயகத்தின் ஆவலாக இருந்தது. அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் அல்லது அவர் கூறுவதைப் போன்று கடவுளின் சித்தம் அவரை அரசியலுக்கு கொண்டுவந்தன. பின்னர் ஒரு கட்டத்தில் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வருவதற்கான சந்தர்ப்பமும் தோன்றியது. செல்வநாயகம் தனது அரசியல் நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்பைச் செய்யாதவராக இருக்கப்போகிறார் என்பதை உணர்ந்து கொண்ட டி.எஸ். சேனநாயக்க அவருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவியைக் கொடுப்பதன் மூலமாக அரசியல் ரீதியில் ஒரு தடையை அகற்ற நினைத்தார்.

செல்வநாயகத்திடம் இரு தூதுவர்களை அனுப்பி தனது எண்ணத்தை சேனநாயக்க தெரியப்படுத்தினார். தனக்கு நீதிபதி பதவியை வழங்குவதற்கு அவர் விரும்பியதற்கான நோக்கத்தைப் புரிந்து கொண்ட செல்வநாயகம் அதை ஏற்க மறுத்து விட்டார். மேன்மையான ஆனால் இடைஞ்சல்கள் நிறைந்த அரசியல் இலட்சியப்பாதையில் செல்வதற்காக நீதிபதியாக வேண்டும் என்ற தனது வாழ்நாள் விருப்பத்தை அவர் கைவிட்டார்.

கொந்தளிப்பான டொனமூர் யுகத்தில் செல்வநாயகம் தமிழர் அரசியலில் இருந்து தூரவிலகியிருந்து கொண்டு அரசியல் நிகழ்வுப்போக்குகளை உன்னிப்பாக அவதானித்தார். 1940 களில் கொழும்பு சட்ட நூலகத்தில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை சந்தித்தபோதே அரசியலில் வெளிப்படையான ஆர்வத்தை முதன் முதலாக செல்வநாயகம் வெளிக்காட்டினார். தமிழர் பிரச்சினை தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பப்படவிருந்த மகஜர் ஒன்றில் தானாக முன்வந்து அவர் கையெழுத்திட்டார்

அதற்குப் பிறகு தமிழ் அரசியல் விவகாரங்களில் நெருக்கமாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்த அவர் தமிழ் காங்கிரஸில் இணைந்து செயற்பட்டார். தீவிர அரசியலில் இறங்குவதற்கு அவரை இணங்கவைத்தவர் முன்னாள் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேற்பிள்ளையின் தந்தையார் சிவசுப்பிரமணியமே ஆவார். சோல்பரி ஆணைக்குழுவை சந்திப்பதற்கு ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையில் சென்ற தூதுக்குழுவில் செல்வநாயகமும் இருந்தார். விரைவாகவே தமிழ் காங்கிரஸின் செயற்பாடுகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட அவர் 1946 ஆம் ஆண்டளவில் பொன்னம்பலத்தின் ” துணை காப்டனாக ” கருதப்பட்டார்.

ஜேன் றசல் கூறியது

இந்த நிகழ்வுப் போக்குகளை ” டொனமூர் அரசியலமைப்பின் கீழ் இனவாத அரசியல் ” என்ற தனது நூலில் ஜேன் றசல் பின்வருமாறு எழுதினார் ;

“கிறிஸ்தவரான கொழும்பு வழக்கறிஞர் எஸ். ஜே.வி. செல்வநாயகம் பொன்னம்பலத்துக்கு அடுத்த தலைவராக வந்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அதிகாரத்துக்கான தனது தனிப்பட்ட குறிக்கோள்களை திருப்திப்படுத்துவதில் பெருமளவுக்கு அக்கறை கொண்டவரான பொன்னம்பலத்தைப் போலன்றி, செல்வநாயகம் சிங்கள பௌத்த கலாசாரத்தின் மேலெழுகை இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் தொடர்பில் கருத்தூன்றிய அக்கறை கொண்டவராக விளங்கினார்.

” செல்வநாயகம் ஆழமாகச் சிந்திக்கின்ற ஒரு மனிதர். அரசியல்வாதி என்ற வகையில் அவர் நேர்மையை வெளிக்காட்டினார். அது பொன்னம்பலத்திடம் இருக்கவில்லை. செல்வநாயகத்தின் தமிழ்த் தேசியவாதம் ஒரு சந்தர்ப்பவாத குமிழி அல்ல. மாறாக, அது ஒரு ஆழமான இயல்புணர்ச்சியாக இருந்தது ; தீவிரமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்க் கலாசாரம் மீதான தடுமாற்றமற்ற விசுவாசத்துக்கு ஒப்பான ஒரு புரிதலாக இருந்தது.

” இலங்கை தமிழ்க் கலாசாரத்துடனான செல்வநாயகத்தின் பிணைப்பு உண்மையான தமிழ்த் தேசியவாதத்துக்கு பெருமளவுக்கு நெருக்கமானதாக வந்தது. அவரது துயரார்ந்த கருத்துக்களும் வாய்மைவாய்ந்த நிலைப்பாடுகளும் (தனது பிற்காலத்தில் ஐக்கிய இலங்கை என்ற இலட்சியத்தில் இருந்து தனித்தமிழ் நாடு என்ற கோட்பாட்டுக்கு திரும்பிய) பொன்னம்பலம் அருணாச்சலத்தின் வாரிசாக அவரை பிரகடனம் செய்தன.

” 1947 ஆம் ஆண்டில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் கொள்கையில் இருந்து வேறுபட்ட ஒரு கொள்கையை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் முன்வைக்கவில்லை என்ற போதிலும், அவரது அணுகுமுறை சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை தமிழர் அரசியலின் தொனியிலும் நடத்தையிலும் ஒரு தீவிரமான மாற்றம் ஏற்படப் போகின்றது என்பதற்கு குறிசொல்லியது.”

வேறுபாடுகளுக்கு காரணம்

1947 பாராளுமன்ற போட்டியிட்ட தமிழ் காங்கிரஸ் ஏழு ஆசனங்களில் வெற்றி பெற்றது. காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்ட செல்வநாயகம் 12,126 வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார். லங்கா சமசமாஜ கட்சியை சேர்ந்த நாகலிங்கத்தையும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த நடேசபிள்ளையையும் அவர் தோற்கடித்தார். தமிழ் காங்கிரஸின் எதிர்காலப் போக்கு குறித்து விரைவாகவே செல்வநாயகத்துக்கும் பொனானம்பலத்துக்கும் அரசியல் வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. செல்வநாயகத்தின் மருமகனான பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் தனது ” எஸ். ஜே.வி. செல்வநாயகமும் இலங்கை தமிழ்த் தேசியவாத நெருக்கடியும் 1947 — 1977 ” என்ற நூலில் அன்றைய நிலைவரத்தை பினவருமாறு எழுதியிருக்கிறார் ;

” 1947 தேர்தலில் தமிழ் காஙகிரஸுக்கு கிடைத்த வெற்றியை முற்போக்கு சிந்தனைகொண்ட சிங்களக் கட்சிகளுடன் விட்டுக்கொடுத்து ஒத்துழைப்பதற்கு தமிழ் வாக்காளர்கள் தந்த ஆணையாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி தமிழ்ப்பகுதிகளுக்கு பயனைப் பெறுவதற்கு அமைச்சரவையில் பதவிகளைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகவும் பொன்னம்பலம் வியாக்கியானம் செய்தார்.

” செல்வநாயகத்தைப் பொறுத்தவரை, தமிழர்களின் ஒத்துழைப்பை இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை, சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்து, புதிய அரசுக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தேசியக்கொடி, தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்களை அரசாங்க உதவியுடன் குடியேற்றுவதை நிறுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஏற்புடைய தீர்வொன்றைக் காண்பதற்கான ஒரு நெம்புகோலாக தமிழர்களின் ஒத்துழைப்பை பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினார். இந்த முன்னிபந்தனைகள் நிநைவேற்றப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். இலங்கைத்தீவின் எதிர்கால அரசியலமைப்பு கட்டமைப்பை தீர்மானிப்பதற்கு அரசியலமைப்புச்சபை ஒன்று கூட்டப்பட வேண்டும் என்றும் செல்வநாயகம் விரும்பினார். பொன்னம்பலம் இந்த உத்தரவாதங்களைப் பெறவில்லை.”

பொன்னம்பலம் ஒரு அமைச்சராக வந்து குடியுரிமைப் பிரச்சினையில் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களித்த பின்னரும் கூட, செல்வநாயகம் உடனடியாகப் பிரிந்து செல்லவில்லை. பதிலாக, அவர் தமிழ் காங்கிரஸிலேயே தொடர்ந்து இருந்து பொன்னம்பலத்துடன் போராடுவதா அல்லது புதிய அரசியல் கட்சியொன்றை தொடக்குவதா என்று தடுமாறிக் கொண்டிருந்தார். இறுதியாக கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வன்னியசிங்கத்துடனும் செனட்டர் ஈ.எம்.வி. நாகநாதனுடனும் சேர்ந்து செல்வநாயகம் பிரிந்து சென்றார். 1949 டிசம்பரில் இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

செல்வநாயகத்தினதும் அவரது கட்சியினதும் நடவடிக்கைகள் தமிழர் அரசியலில் கோட்பாட்டு ரீதியான நகர்வு ஒனறை ஏற்படுத்தின. மொழி அடிப்படையில் தமிழ்த் தேசியவாதத்தை வகுத்து அவர் அதற்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட பிராந்திய அடிப்படையில் ஒரு பரிமாணத்தைக் கொடுத்தார். வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய தாயகங்கள். இரு மாகாணங்களும் சுயாட்சிகொண்ட ஒரு தமிழ் அரசாக அமையும். இந்த அரசு சிங்கள அரசுடன் சமஷ்டி ஏற்பாடு ஒன்றுக்கு வந்து இலங்கை ஒன்றியத்திற்குள் இருக்கும்.

தமிழரசு கட்சி சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் சம அந்தஸ்தைக் கோரியது. இது இலங்கை தமிழர்களுக்கான கோரிக்கையாக மாத்திரம் இல்லாமல் முஸ்லிம்களையும் மலையக தமிழர்களையும் உள்ளடக்கியதாக தமிழ்பேசும் மக்கள் சகலருக்குமான கோரிக்கையாக இருந்தது. சிங்களக் குடியேற்றங்கள் மூலமாக தமிழ் பாரம்பரியத் தாயகத்தின் குடிப்பரம்பல் மாற்றியமைக்கப்படுவதையும் தமிழரசு கட்சி எதிர்த்தது.

புதிய கட்சியினால் 1952 பாராளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறமுடியவில்லை. கோப்பாயில் வன்னியசிங்கமும் திருகோணமலையில் மாத்திமே பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். மட்டக்களப்பில் தமிழரசு கட்சியின் ஆதரவுடன் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் அடுத்த நாளே ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவிவிட்டார். முன்னர் குறிப்பிட்டதைப் போன்று செல்வவநாயகம் காங்கேசன்துறையில் தோல்விகண்டார்.

தமிழர்கள் எதிர்நோக்கிய ஆபத்துக்கள் குறித்து செல்வநாயகத்தின் கருத்துக்களுக்கு தமிழ்ச்சமூகம் அந்த நேரத்தில் கவனம் கொடுக்கவில்லை. ஆனால், தெற்கில் சிங்கள பௌத்த தேசாயவாதிகள் செல்வாக்கைப் பெறத்தொடங்கியபோது அதற்கு சமாந்தரமாக தமிழ்ப்பகுதிகளில் தமிழ்த்தேசியவாதமும் உத்வேகம் பெறத் தொடங்கியது. விரைவாகவே தமிழ் மக்கள் அதிகரிக்கும் ஆபத்தை உணர்ந்து கொண்டார்கள். வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்த ஒரு தீர்க்கதரிசியாக செல்வநாயகத்தை நோக்கிய அவர்கள் அந்த முக்கியமான காலகட்டத்தில் தங்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்தக்கூடியவர் அவரே என்று புரிந்துகொண்டார்கள். கண்ணியமும் கனிவும் நிறைந்த செல்வநாயகம் தமிழர் அரசியலில் மிகுந்த மக்கள் செல்வாக்குடைய தனியொரு தலைவராக மாறினார்.

பண்டாரநாயக்கவின் ,தேர்தல் வெற்றி

1956 ஆம் ஆண்டு ஒரு மைல்கல்லாக அமைந்தது. சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கும் வாக்குறுதியை சிங்கள மககளுக்கு வழங்கி எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க தெற்கில் தேர்தலில் பெருவெற்றி பெற்ற அதேவேளை, தமிழரசு கட்சி வடக்கில் ஆறு ஆசனங்களையும் கிழக்கில் நான்கு ஆசனங்களையும் வென்றெடுத்தது.

தமிழரசு கட்சி செல்வநாயகத்தின் தலைமையில் புதியதொரு அரசியல் போராட்டக் கலாசாரத்தை தொடங்கியது. அது காந்திய கோட்பாட்டின் வழியில் அமைந்த ‘ அகிம்சைப்’ போராட்டமாகும். அரசகரும மொழிகள் சட்டத்தை பாராளுமன்றம் விவாதித்துக் கொண்டிருந்தபோது கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகமே முதன்முதலான பெரிய போராட்டமாகும். அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகளின் ஆதரவுடனான குண்டர்கள் சத்தியாக்கிரகிகள் மீது ஈவிரக்கமற்ற முறையில் தாக்குதல்களை நடத்திய அதேவேளை, ” கைகள் கட்டப்பட்ட ” பொலிசார் பாரத்துக்கொண்டு நின்றனர். செல்வநாயகத்தின் மகனும் அவரின் முன்னிலையிலேயே தாக்கப்பட்டார். மகன் தாக்குதலுக்குள்ளான வேளையில் தந்தை பின்வாங்காமல் தரையில் அமர்ந்திருந்து சத்தியாக்கிரகத்தை தொடர்ந்தார். அந்த காட்சியை தமிழ்க்கவிஞர் காசி ஆனந்தன் கிளர்ச்சியைத் தூண்டும் வகையிலான கவிதையில் வடித்து காவியமாக்கினார்.

அரசியல் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் மற்றும் மகாநாடுகளுக்கு புறம்பாக , ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், கறுப்புக்கொடிப் போராட்டங்கள், ஹர்த்தால்கள், பகிஷ்கரிப்புகள், கடிதம் எழுதும் இயக்கம், நிருவாக ஒழுங்குவிதிகளுக்கு கீழ்ப்படியாமை,தார்பூசும் இயக்கம் என்று வேறுபல அகிம்சைப் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் எல்லாம் தமிழ் மக்களை பெருமளவுக்கு அரசியல்மயப்பட்ட ஒரு சமூகமாக மாற்றின.

செல்வநாயகம் அவரது ஆதரவாளர்களினால் ” தந்தை செல்வா”, ஈழத்துக்காந்தி ” என்று இப்போது அழைக்கப்பட்டார். தந்தை என்பது திராவிட இயக்கத்தில் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் தந்தையான ஈ.வெ. இராமசாமி நாயக்கர் ” தந்தை பெரியார்” என்று அழைக்கப்பட்டார். ஈழத்துக்காந்தி என்பது இந்திய காங்கிரஸ் கலாசாரத்தில் இருந்து வந்தது. செல்வநாயகத்தின் எதிரிகள் அவரை ” காற்சட்டைக்காந்தி ” என்று கேலி செய்தனர். தமிழரசு கட்சியின் பெருப்பாலான ஆதரவாளர்கள் அவரை ” பெரியவர் ” என்று அழைத்தனர். செல்வநாயகம் இப்போது ஒரு வழிபாட்டுக்குரிய தலைவர் என்ற அந்தஸ்தை அடைந்து விட்டார்.

தமிழரசு கட்சியினால் நடத்தப்பட்ட போராட்டங்களில் தார்பூசும் ஸ்ரீ எதிர்ப்பு இயக்கமும் 1961 வெகுஜன சத்தியாக்கிரகமும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. தார்பூசும் இயக்கம் தொடர்பாக 1958 ஆம் ஆண்டில் செல்வநாயகம் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார். 1961 ஆம் ஆண்டில் அரசாங்க செயலகங்களுக்கு முன்பாக தமிழர்கள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நிருவாகம் முடக்கியது. தனியான தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டு முத்திரையும் வெளியிடப்பட்டபோது சத்தியாக்கிரக இயக்கம் அதன் உச்சத்தை எட்டியது. இறுதியில் அதை அடக்குவதற்கு அரசாங்கம் இராணுவத்தை அனுப்பியது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. செல்வநாயகம் உட்பட தமிழ்த் தலைவர்கள் தடுப்புக்காவலிலும் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டனர். 1958 ஆம் ஆண்டிலும் தமிழரசு தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தை கையாளும் விடயத்தில் செல்வநாயகத்தின் தந்திரோபாயம் அதற்கு எதிராகப் போராடுவதும் பேச்சுவார்த்தை நடத்துவதுமாகவே இருந்தது. அகிம்சைப் போராட்டங்கள் மற்றும் ஆவேசப் பேச்சுக்களுக்கு மத்தியிலும் தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியல் இணக்கத்தீர்வு ஒன்றை எட்டுவதிலேயே பெருமளவுக்கு நாட்டம் காட்டியது என்பதை நேர்மையுடன் குறிப்பிட வேண்டும்.

அரசியல் விட்டுக்கொடுப்பைச் செய்யுமுகமாக செல்வநாயகமும் தமிழரசு கட்சியும் தங்களது மூலமுதல் நிலைப்பாடுகளில் பெருமளவுக்கு தளர்வுகளைச் செய்தனர். உதாரணமாக, சமஷ்டிக் கட்டமைப்புக்கு பதிலாக பிராந்திய சபைகளையும் மாவட்ட சபைகளையும் ஏற்றுக் கொள்ளுமளவுக்கு இணங்கிவரக்கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். தமிழுக்கு அரசகரும மொழி அந்தஸ்து என்ற கெட்டியான நிலைப்பாட்டுக்கு பதிலாக தமிழ்மொழியின் பயன்பாடு தொடர்பில் விசேட ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருந்தனர்.

அவ்வாறு இருந்தாலும் கூட, செல்வநாயகம் இரு பிரதமர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் சிங்களத் தீவிரவாதிகளின் நெருக்குதல்களை அடுத்து கிழித்தெறியப்பட்டன. 1957 பண்டாரநாயக்க — செல்வநாயகம் உடன்படிக்கையும் 1965 டட்லி சேனநாயக்க — செல்வநாயகம் உடன்படிக்கையும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தமிழர் பிரச்சினை வன்முறைப் பரிமாணங்களை எடுப்பதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரேயே தீர்க்கப்பட்டிருக்கும். அதே போன்றே செல்வநாயகம் போன்ற தலைவர்கள் அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்தபோது தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டிருந்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலை தோன்றியிருக்காது.

தமிழர் பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் ஊடாக தீர்த்து வைப்பதற்கு செல்வநாயகம் தவறிய போதிலும், அதை அவரது தவறு என்று தமிழ் மக்கள் கருதவில்லை. செல்வநாயகத்துக்கு துரோகம் செய்ததன் மூலமாக சிங்களத் தலைவர்களே தவறிழைத்ததாக தமிழ் மக்கள் கருதினர். செல்வநாயகத்தை ஏமாற்றியது என்பது தங்களை ஏமாற்றியதாகவே தமிழ் மக்கள் நம்பினர். அதனால் செல்வநாயகமும் தமிழரசு கட்சியும் தமிழ் பாராளுமன்ற ஆசனங்களால் பருமளவானவற்றை தொடர்ச்சியாகக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது. தமிழரசு கட்சிக்கு 1956 ஆம் ஆண்டில் பத்து ஆசனங்கள், 1960 மார்ச்சில் பதினைந்து ஆசனங்கள், 1960 ஜூலையில் 16 ஆசனங்கள், 1965 ஆம் ஆண்டில் 14 ஆசனங்கள் , 1970 ஆம் ஆண்டில் 13 ஆசனங்கள் கிடைத்தன.

தமிழர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான உயர்ந்த சபை பாராளுமன்றமே என்ற அடிப்படையில் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதை தமிழரசு கட்சி எப்போதுமே நியாயப்படுத்தியது. எதிரியினால் பிரித்தாளப்படுவதை தடுப்பதற்கு தமிழர்களின் ஐக்கியம் அவசியமானது என்றும் தமிழரசு கட்சி உறுதியாக நம்பியது. பாராளுமன்ற தேர்தல்களில் நெருக்கமான போட்டி நிலவுகின்ற சந்தர்ப்பங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வலிமையான கூட்டணியாக திரண்டு நிற்பதன் மூலமாக அதிகாரச்சமநிலையைப் பேணக்கூடியதாக இருக்கும் என்றும் அதன் மூலமாக பலம்பொருந்திய ஒரு நிலையில் இருந்து கொண்டு பேரம்பேச முடியும் என்றும் தமிழரசு கட்சி கூறியது என்பது முக்கியமானதாகும்.

தமிழரசு கட்சியின் தந்திரோபாயங்கள்

இந்த தந்திரோபாயங்கள் 1960 மார்ச் மற்றும் 1965 தேர்தல்களில் ஓரளவுக்கு வெற்றியளித்தது. அந்த தேர்தல்களில் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற செல்வாக்கு அரசாங்கங்களை அமைப்பதிலும் கவிழ்ப்பதிரும் முக்கியமான ஒரு காரணியாக விளங்கியது. ஆனால், அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கங்கள் உறுதியான பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்தபோது தமிழரசு கட்சி அரசியல் ரீதியில் பலவீனமாகிப் போனது.தமிழரசு கட்சி அமைதிவழிப் போராட்டமும் பேச்சுவார்த்தையும் கலந்த அதன் தந்திரோபாயத்தை பொறுத்தவரை, 1961 ஆம் ஆண்டிலும் 1965 — 68 காலப்பகுதியிரும் உச்சநிலையில் இருந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நிருவாகத்தை முடங்க வைத்த 1961 சத்தியாக்கிரகம் தங்களது நியாயபூர்வமான மனக்குறைகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு இருந்த உணர்வுகளின் ஆழத்தையும் தமிழரசு கட்சிக்கு இருந்த பரவலான ஆதரவையும் தெளிவாக வெளிக்காட்டியது. ஆனால், அரசாங்கத்தின் பிரதிபலிப்பு அரசியல் விட்டுக்கொடுப்பாக அன்றி, ஜனநாயக ரீதியான அகிம்சைப் போராட்ட இயக்கம் ஒன்றை படைபலம் கொண்டு நசுக்குவதாகவே இருந்தது.

தமிழரசு கட்சியின் போராட்ட தந்திரோபாயத்தை பொறுத்தவரை 1961 ஆம் ஆண்டு அதன் உயர்ந்த நிலையாக இருந்தது என்றால், பேச்சுவார்த்தை தந்திரோபாயம் 1965 ஆம் ஆண்டில் உச்ச நிலையில் இருந்தது. 1965 ஆம் ஆண்டில் பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் தமிழரசு கட்சி ஒரு பங்காளியாகியது. அந்த கட்சியின் செனட்டராக நியமிக்கப்பட்ட எம். திருச்செல்வம் அமைச்சரவையில் உள்ளூராட்சி அமைச்சரானார். மாவட்ட சபைகளின் ஊடாக ஓரளவு அதிகார பன்முகப்படுத்தலை நடைமுறைப்படுத்துவதே எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அந்த முயற்சியும் கூட தோல்வியில் முடிந்தது.

அந்த வகையில் நோக்கும்போது 1970 ஆம் ஆண்டளவில் தமிழரசு கட்சிக்கு இருந்த தந்திரோபாயத் தெரிவுகள் எல்லாமே தீர்ந்துபோய்விட்டன என்றுதான் கூறவேண்டும். அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சிங்கள வாக்காளர்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு மகத்தான ஆதரவை வழங்கியதை அடுத்து பாராளுமன்றத்திற்குள் பேரம்பேசுவதற்கு தமிழரசு கட்சிக்கு இருந்துவந்த சாத்தியப்பாடும் கூட இல்லாமல்போனது. ” இனிமேல் தமிழர்களை கடவுளால்தான் காப்பற்ற முடியும்” என்று கூறி செல்வநாயகம் தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

தனித்தமிழ் நாடும் ஆயுதப் போராட்டமும்

பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல், புதிய அரசியலமைப்பு போன்ற நடவடிக்கைகள் தாங்கள் அன்னியப்படுத்தப்படுவதாக தமிழ் மக்களுக்கு இருந்த உணர்வை மேலும் ஆழமாக்கின. செலவநாயகம் முன்னெடுத்த அரசியல் பாதை இனிமேலும் பொருத்தமானதாகவோ அல்லது பின்பற்றுவதற்கான தகுதியைக் கொண்டதாகவோ இல்லாமல் போனது. செல்வநாயகத்தின் உடல்நிலையும் குன்றத் தொடங்கியது. ( அவர் பார்க்கின்சன் நோயானால் பீடிக்கப்பட்டிருந்தார்). எனாறாலும் அவர் தொடர்ந்தும் தமிழர்களின் அதியுயர் தலைவராக விளங்கினார். ஆனால், தமிழர்களின் அரசியல் சிந்தனை வேறுபட்ட ஒரு திசையில் விரைவாக நகரத்தொடங்கியது. தனித்தமிழ் ஈழமும் ஆயுதப் போராட்டமும் புதிய ” மந்திரங்களாகின.” வேறு வழியின்றி செல்வநாயகமும் எழுந்துவந்த அந்த அலைக்குள் அகப்பட வேண்டியதாயிற்று.

செல்வநாயகம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தொடர்ந்து செல்லவிடாமல் பொலிசார் தடை செய்தனர். வீதியில் அமர்ந்திருந்து சத்தியாக்கிரகத்தை தொடங்குமாறு அவர் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார். பலர் அவரின் உத்தரவுக்கு அடிபணிந்தனர். ஆனால், பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் அதை மறுத்து பொலிசாரை எதிர்கொண்டு ஊர்வலத்தை தொடர விரும்பினர். இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை இணங்கவைப்பதற்கு அமிர்தலிங்கம் பெரும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. இறுதியில் இளைஞர்களும் வீதியில் அமர்ந்தனர். ஆனால், விரைவாகவே பல இளைஞர்கள் சத்தியாக்கிரகத்தில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணத்தின் பல வீதிகளில் அனுமதி பெறாத ஊர்வலத்தை நடத்தத் தொடங்கினர். அவர்கள் பொலிசாரை எதிர்கொள்ளத் தயாராயிருந்தனர். ஆனால், பொலிசார் அவர்களை அலட்சியம் செய்தனர். அந்த சம்பவம் வளர்ந்துகொண்டிருந்த இளைஞர் கிளர்ச்சியினதும் பழைய தலைவர்கள் பொருத்தமில்லாதவர்களாக மாறிக்கொண்டுவந்த போக்கினதும் ஒரு அடையாளமாக விளங்கியது.

அந்திமக் காலத்தில் தேர்தல் சாதனை

செல்வநாயகத்தின் மிகப்பெரிய தேர்தல் சாதனை அவரது அந்திமக் காலத்திலேயே இடம்பெற்றது. 1972 அக்டோபரில் காங்கேசன்துறை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்த அவர் புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது நிராகரிக்கிறார்களா என்பதை அறிந்துகொள்வதற்கு இடைத்தேர்தல் ஒன்றை நடத்துமாறு பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு சவால் விடுத்தார். ஒரு கணிசமான கால தாமதத்துக்கு பிறகு காங்கேசன்துறை தொகுதியில் 1975 பெப்ரவரி 3 ஆம் திகதி இடைத்தேர்தலை அரசாங்கம் நடத்தியது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வி. பொன்னம்பலத்தை தோற்கடித்து செல்வநாயகம் முன்னென்றும் இல்லாத வகையில் 25, 927 வாக்குகளை கைப்பற்றினார். 16, 470 பெரும்பான்மை வாக்குகளுடனான வெற்றியை செல்வநாயகம் பெற்றார்.

தமிழர் அரசியலில் புதியதொரு கட்டம்

1972 ஆம் ஆண்டில் தமிழ் கட்சிகளின் ஒரு தளர்வான கூட்டணி. அமைக்கப்பட்டது. அது தமிழர் ஐக்கிய கூட்டணி என்று அழைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் அந்த கூட்டணியின் பெயர் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி என்று மாற்றப்பட்டது. செர்வநாயகம், ஜீ.ஜீ பொன்னம்பலம், தொண்டமான– மும்மூர்த்திகள் கூட்டணியின் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். தனித்தமிழ்நாட்டு கோரிக்கை முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழர் அரசியலில் புதியதொரு கட்டம் தொடங்கியது.

செல்வநாயகமும்்தமிழ் ஈழக்கோரிக்கையை ஆதரித்தார். தமிழ் ஈழத்தை அமைப்பது என்பது வில்லங்கமான ஒரு காரியம், ஆனால் ஒரு தேசிய இனமாக தமிழர்கள் வாழவிரும்பினால் வேறு தெரிவு அவர்களுக்கு இல்லை என்று அவர் கூறினார். தமிழ் இளைஞர்கள் தங்களது துணிச்சல், தியாகம் மூலமாக மாத்திரமே ஈழத்தை அடைய முடியும் என்றும் செல்வநாயகம் கூறினார்.

தமிழ் ஈழத்தினதும் ஆயுதப் போராட்டத்தினதும் ஆதரவாளர்கள் செல்வநாயகத்தின் அந்த கூற்றை அவரின் இறுதி விருப்பமாகவும் புதிய ஏற்பாடாகவும் (Last will and testament ) கருதினர். தமிழ்க்காந்தியும் கூட ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கிறார் என்பதினதும் தமிழ் ஈழமே சமரசத்துக்கு இடமில்லாத அவரது நிலைப்பாடு என்பதினதும் சான்றாக அவர்கள் அதை வியாக்கியானப்படுத்தினர். தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக தாங்கள் செல்வநாயகத்தின் அடிச்சுவட்டையே பின்பற்றுவதாக விடுதலை புலிகளின் பேச்சாளர்கள் தமிழ் மக்கள் மத்தியில் பின்னரான காலப்பகுதியில் கூறினார்கள். தங்களது கூற்றுக்கு ஆதரவாக அவர்கள் செல்வநாயகத்தை மேற்கோள் காட்டவும் செய்தார்கள்.

வெவ்வேறு வியாக்கியானங்கள்

தமிழ் ஈழம் மற்றும் ஆயுதப்போராட்டம் தொடர்பில் செல்வநாயகத்தின் நிலைப்பாடு விவாதத்துக்குரியதும் விளங்காப்போக்குடைய வியாக்கியானங்களுக்கும் உட்பட்டதுமாகும். தற்போது செல்வநாயகம் உயிருடன் இருந்திருந்தால் எவ்வாறு செயற்பட்டிருப்பார் என்பது பல வருடங்கள் கழிந்த நிலையில் இன்று பெருளவுக்கு ஊகங்களுக்கு உரியதாகவே இருக்கிறது. ஈழக் கோரிக்கையை அவர் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் காண்பதற்கான தந்திரோபாயமாகவே பயன்படுத்தியிருக்கக்கூடும் என்றும் ஆயுதப் போராட்டத்துக்கு அவர் ஒருபோதும் ஆதரவு அளத்திருக்க மாட்டார்கள் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் உணருகிறார்கள். ஆனால், இந்த விடயத்தில் உண்மை எது என்பது தொடர்பில் திட்டவட்டமான ஏகபோகத் தனியுரிமை எவருக்கும் இல்லை. இது தொடர்பிலான சர்ச்சை ஆய்வாளர்கள் மத்தியில் தீர்வுகாணமுடியாத விவாதத்துக்கான ஒரு தொனிப்பொருளாகவே தொடர்ந்து இருக்கும்.

அரசியல் மரபு

செல்வநாயகம் 1977 ஏப்ரில் 26 ஆம் திகதி காலமானார்.வீடாடில் தவறி வீழ்ந்த அவர் மரணமடையும் வரை முழுமையான மயக்க நிலையிலேயே இருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செல்வநாயகத்தின் இறுதிச்சடங்கு தமிழர்கள் மத்தியில் முன்னென்றும் கண்டிராத கூட்டுச் சோகமாரியின் உண்மையான காட்சியாக அமைந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு ஜூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணிக்கு கிடைத்த பிரமாண்டமான வெற்றி செல்வநாயகத்தின் நினைவுக்கான ஒரு மகத்தான அஞ்சலியாக இருந்தது. அந்த தேர்தல் பிரசாரங்களின்போது செல்வநாயகத்தின் பெயரும் அவரது அரசியல் மரபும் மிகவும் பெரியளவில் வரவழைக்கப்பட்டன.

சகல அரசியல் கட்சிகளும் செல்வநாயகத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தின. ஜெயவர்தனவும் அத்துலத்முதலியும் வெளிப்படுத்திய கருத்துக்கள் அவருக்கு செலுத்தப்பட்ட அஞ்சலியின் சில குறிகாட்டிகள் மாத்திரமே. ஆனால், முன்னர் சில சிங்களத் தலைலர்கள் செல்வநாயகத்தைப் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் இவற்றுக்கு முற்றிலும் முரணானவையாகவும் இரக்கமற்றவையாகவும் அமைந்திருந்தன என்பது கவனிக்கத்தக்கது.

” மெலிந்த உருவமும் பசியால் வாடியவரைப் போன்ற தோற்மும் கொண்ட அந்த மனிதர் மீது என்னால் நம்பிக்கை வைக்கமுடியாது” என்று டி. எஸ். சேனநாயக்க செல்வநாயகத்தைப் பற்றி கூறினார். எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, “ உலகில் உள்ள மனிதப் பிறவிகளில் மிகவும் ஆபத்தான வகையைச் சேர்ந்த ஒருவர் என்பது நிச்சயமானது. தனது சொந்த வழியில் அவர் இலட்சியத்தில் நேர்மையான உறுதிப்பாடு கொண்டவர். அவர் ஒரு இலட்சியவாதி. ஆனால், நடைமுறை யதார்த்தத்தைப் பற்றி எந்தவிதமான சிந்தனையும் இல்லாதவர். விவகாரங்களின் நடைமுறைச் சாத்தியமான பக்கத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாதவர். அத்தகைய ஆட்கள் மிகவும் ஆபத்தானவர்கள்” என்று செல்வநாயகத்தை வரணித்தார்.

அந்த நேரத்தில் நிலவிய மிகவும் கவலைக்குரிய நிலைவரம் இது. அகிம்சையில் நம்பிக்கை கொண்டவரும் அடிப்படைக் கோராக்கைகளுக்கு குறைவான எதையாவது ஏற்றுக்கொண்டு பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வைக் காண்பதில் நாட்டம் காட்டும் பண்பை வெளிப்படுத்தியவருமான அந்த மனிதர் நம்பிக்கை வைக்க முடியாதவராகவும் ஆபத்தானவராகவும் காண்பிக்கப்ட்டார். அன்று செல்வநாயகத்துடன் அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு அர்த்தபுஷ்டியான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை.

இன்று செல்வநாயகத்தின் நினைவு நடைமுறையில் அருகிப்போய் விட்டது. பிரபாகரன்தான் போராட்டத்தை ஆரம்பித்தார் என்று நினைக்கும் இன்றைய இளந்தலைமுறை சுமார் மூன்று தசாப்தகாலமாக தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அகிம்சைவழிப் போராட்டங்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்திய செல்வநாயகம் என்ற அந்த மனிதரை அறிந்திருப்பதாகவும்கூட இல்லை. ஊழலற்ற, தமிழர்களை ஏமாற்றாத நேர்மையானவர் தலைவர் என்று போற்றி வணங்கப்பட்ட அந்த மனிதரை இவர்களுக்கு தெரியாது.

செல்வநாயகம் தனக்கே உரித்தான வழியில் போராட்டத்துக்கு தலைமைதாக்கி வழிநடத்தியிருக்காவிட்டால் எதிர்காலத்தில் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கான தமிழ்த்தேசியவாத தளம் ஒன்றே இருந்திருக்காது என்பதை இன்றைய இளைய தலைமுறை விளங்கிக் கொள்ளவில்லை.

வேலுப்பிள்ளை செல்வநாயகத்தினதும் அவரது அகிம்சை ஆயுதத்தினதும் நாட்கள் போய்விட்டன. எஞ்சியிருப்பது எல்லாம் வேலுப்பிள்ளை பிரபாகரனினதும் அவரது ஆயுதங்களினதும் நாட்கள் பற்றிய நினைவுகளே.

D.B.S.Jeyaraj can be reached at dbsjeyaraj@yahoo.com

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ்.

தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம்

நன்றி: வீரகேசரி

************************************************************************************************